கருத்துகளை புரிந்து கொள்வதிலும் வாழ்க்கை வாழ்கிறது!!

எல்லாக் கணமும் நாம் கற்றுக் கொண்டிருக்கிறோம். அதற்கேற்றார் போல், நம் கருத்துகளும் மாறிக் கொண்டிருக்கின்றன.

தோழர்கள்

Saturday, 29 October 2011

மகவு

உன் பொக்கை வாய் சிரிப்பில்,
எம் நினைவு சுமைகளை புறந்தள்ளி விடுகிறாய்!
 
முகத்தை வருடும் தளிர் கரங்களால்
கவலைகளை கரைத்து விடுகிறாய்!
 
தலைவலிகள் தலைமறைவாகின்றன!
கவி பாடும் உன் விழிகளே, கட்டளை ஆகின்றன!
மாற்றங்களை கொணர்வது தெய்வம் மட்டுமில்லை,
நீயும் தான்!!

Saturday, 25 September 2010

திருமணம்

திருமணம்...
இரு உள்ளங்களை இணைத்து, ஒட்டு மொத்த உணர்வுகளையும்
பகிர்ந்து கொள்ள, சமூகம் சமைத்த ஒரு வழிமுறை!!
புரிந்து கொள்வதும் பணிந்து போவதும்
மண வாழ்வை வளமாக்கும்!!
விட்டுக்கொடுப்பதே விருப்பமானால்
இல்வாழ்க்கையில் இனிமை குடியிருக்கும்!!
 

Wednesday, 1 September 2010

நீயே நானாய்

நீ என்னுள் பாதியாம்!
அவர்களுக்கு எங்கே தெரியும்?
நீயே முழுமையாய் நான்தானென்று!! 

விழி ஈர்ப்பு விசை

புவி ஈர்ப்பு விசை கூட
புலம்பி கொண்டிருக்கிறது!
உன் விழி ஈர்ப்பின் வேகம் கண்டு!!

Monday, 23 August 2010

வாழ்க்கை பயணம்

நீண்ட நேர இரவு பயணம்,
உடல் வருடும் குளிர் காற்று,
இதயம் சுமக்கும் உன் நினைவுகள்,
அலுக்காமல் செல்லுமா?
நம் வாழ்க்கை பயணமும்??

திருமணம்

எனது சுதந்திரங்கள் சில பறிக்கப்படலாம்!
இருப்பினும் உன்னுள் சிறைப்படவே விரும்புகிறேன்!!

செல்லத் திருடி!

ஹலோ செல்லத் திருடி!
இமை திறந்த நேரத்தில்
என்னுள் புகுந்து களவாடி விட்டாய்!!
நான் பத்திரமாய் இருக்கிறேனா??

Monday, 16 August 2010

திருமணம் சொர்க்கத்தில்....

திருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறதாம்!
சரிதான்! அதற்கு பிறகு
வாழ்க்கைதான் நரகமாகிவிடுகிறது!! 

Sunday, 15 August 2010

சுதந்திர தினம் ஒரு கேலிக்கூத்து!!

தன்னலமற்ற தலைவர்களை காணவில்லை
மக்களாட்சியில் தினமும் மக்களே பலியிடப்படுகிறார்கள்
சாதியம் குருதி வார்த்து வளர்க்கப்படுகிறது
மத வெறியர்கள் தேர்தலில் வெற்றி கொள்கிறார்கள்
பழங்குடியினர் வேரோடு அகற்றப்படுகிறார்கள்
பசியில் வாடுபவர்களும், விலைவாசியும் அதிகரித்தவாறே!!
மன்னர்களின் ஆட்சியை அகற்றி விட்டோம்
அங்கே இப்போது குடும்பங்கள் குடியேறிவிட்டன

வானளாவிய கட்டிடங்களும், பெரிய வானூர்தி நிலையங்களும்
உலகிலேயே பெரிய பணக்காரர்களும் இந்தியாவில் இருக்கலாம்!
அதற்காகவெல்லாம் சுதந்திர தினத்தை எண்ணி
என்னால் மகிழ்ச்சி கொள்ள முடிவதில்லை!! 

எளிய மக்களின் இன்னல்கள் தீர்க்கப்படாத வரை,
அவர்களின் உரிமைகள் நிலை நிறுத்தப்படாத வரை,
சுதந்திர தினம் ஒரு கேலிக்கூத்து!!